சென்னை: குழந்தைகள் ஒரு நாட்டின் செல்வம் என குழந்தைகள் தினத்தையட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

குழந்தைகள் ஒரு நாட்டின் செல்வம்! திறந்த மனத்தோடு உலகை அணுகுவதும், கற்கும் ஆர்வமும் குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள். குழந்தைகளின் உலகில் அவர்கள் அச்சமின்றி உலவிடத் தேவையான பாதுகாப்பை உறுதிசெய்வோம்! அவர்களது தேவைகளை நிறைவுசெய்வோம்! குழந்தைகள் தின வாழ்த்துக்கள் என தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் நவ14ம் தேதி இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், குழந்தைகள் ஒரு நாட்டின் செல்வம் என்று குழந்தைகள் தின வாழ்த்துக்கள் தெரிவித்து முதலமைச்சர் முக ஸ்டலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நிளைவாகவும், குழந்தைகள் அவர் மீது கொண்ட நேசத்தின் அடையாளமாகவும், அவருடைய பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் நாளைக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

குழந்தைகளின் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கெனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம்.

குழந்தைகளின் மனநலன், உடல்நலன் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி அதற்கேற்பப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கான கலை, பண்பாட்டு வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் ஏட்டுக்கல்வியையும் தாண்டி வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில், சிறார் திரைப்பட விழா அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. இப்படியான மகிழ்ச்சியான கல்வி கற்றல் நம் பள்ளிகளில் உருவாகி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு மாற்றம்.

கிராமப்புறக் குழந்தைகள், நகர்ப்புறக் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி, சமமான வாய்ப்பு பெற்று, ஒளிமயமான வாழ்வினைப் பெற்றிட சிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும். எனவே, இளம் சிறார்கள் அனைவருக்கும் என் குழந்தைகள் நாள் வாழ்த்துகள். குழந்தைகளை போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம் என தெரிவித்துள்ளார்.