கோயமுத்தூர்: இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் பெருமை என்றும், தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில், தொழில் துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு  இன்று நடைபெற்றது.   இந்த  மாநாநாட்டில்,  முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தொழில் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.34,723 கோடிக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.  ரூ.34,723 கோடி முதலீடுகள் மூலம் 74,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து 3வது முதலீட்டாளர்கள் மாநாட்டில், “தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021, ஒற்றை சாளர இணையதளம் ஆப், காலப்பேழை புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முன்னதாக அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு மீது நம்பிக்கை வைத்து அனைத்து தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்கள் சார்பில் வந்திருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் பெருமை என்றும், தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சோதனையான காலத்திலும் தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தோம். ஜூலை மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினோம். செப்டம்பரில் ஏற்றுமதியாளர் மாநாடு நடத்தப்பட்டது. மீண்டும் நவம்பர் மாதத்தில் அடுத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்திருக்கிறோம். கடந்த 5 மாதங்களில் 3-வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

இதே வேகத்தில் போனால், முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெறும். நாம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கினை அடைவது வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் அளித்துக் கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் 2,3-ம் கட்ட நகரங்களில் நியோ டைடல் பார்க்குகள் அமைக்கப்படும்.

இன்று பல்வேறு நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள  52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம்  74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தவர்,  நாட்டிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி.

இவ்வாறு கூறினார்.

முதலீட்டாளர் மாநாடு குறித்து, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ”முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தொழில்துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு, இன்று (23.11.2021) கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது. இம்மாநாட்டின் வாயிலாக மொத்தம் 82 திட்டங்களின் மூலம் 52,549 கோடி ரூபாய் முதலீட்டில் 92,420 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், 34,723 கோடி ரூபாய் முதலீட்டில் 74,835 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 485 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,960 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 7 வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஆக மொத்தம், ரூ.35,208 கோடி ரூபாய் முதலீட்டில், 76,795 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

டிட்கோ நிறுவனம் தயாரித்துள்ள மாநிலத்தில் உள்ள வான்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேடு ஒன்றினையும் முதல்வர் இன்றைய தினம் வெளியிட்டார். ஒவ்வொரு நிறுவனத்தின் உற்பத்தித் திறன், தொடர்பு விவரங்கள், உற்பத்திப் பொருட்களின் விவரம், சோதனைக்கான வசதிகள், ஆராய்ச்சி நிலையங்கள், முதற்கட்டத் தொழில் பாதுகாப்புப் பூங்காக்கள், அரசு வழங்கும் மானியங்கள் போன்ற விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தில் தங்களது வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இக்கையேடு முதலாம் மற்றும் இரண்டாம் அடுக்கு நிறுவனங்களுக்கும், OEM நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு, விநியோகச் சங்கிலி பலப்படுத்திட உதவிடும்.

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறைகளுக்கான உற்பத்தியை மேம்படுத்த ஒரு திறன்மிகு மையத்தினை டிட்கோ நிறுவனம், டசோ சிஸ்டம்ஸ் (M/s Dassault Systemes) நிறுவனத்துடன் இணைந்து நிறுவ உள்ளது. 212 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள, இத்திறன்மிகு மையம், பொருள் வடிவமைப்பு, உற்பத்தி மேம்பாடு, புரோட்டோ டைப்பிங், திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு போன்ற செயல்திறன்களை வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிலகங்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் வழங்கும்.

மேலும், இதன் மூலமாக, தமிழகத்தில் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறையில் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதுடன், ஏற்கெனவே இயங்கி வரும் சிறு மற்றும் குறுதொழில் நிறுவனங்களுக்கும் பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்தப் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டது.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்

இந்நிகழ்ச்சியின்போது முதல்வர் 13,413 கோடி ரூபாய் முதலீட்டில் 11,681 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021 வெளியீடு

2021-22ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறே, முதல்வர் நிதிநுட்பத் துறை வளர்ச்சிக்கு ஏதுவாகவும், மேம்பட்ட நிதிநுட்ப (Fintech) நிறுவனங்களின் முதலீடுகளைப் பெருமளவில் ஈர்த்திடும் வகையிலும் “தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021”-ஐ வெளியிட்டார்.

மேலும், சென்னையில் நிதிநுட்ப நகரம் (Fin Tech City), இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில், நியோ டைடல் தொழில்நுட்பப் பூங்காக்கள் (Neo – TIDEL Parks) அமைத்தல் போன்ற பல சிறப்பம்சங்கள் இக்கொள்கையில் இடம் பெற்றுள்ளன.

ஒற்றைச்சாளர இணையம் 2.0 கைபேசி செயலி

முதல்வர் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0வின் கைப்பேசி செயலியைத் தொடங்கி வைத்தார். தற்போது உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், இக்கைப்பேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மேற்கொள்ளுதல், அனுமதிகள் பற்றிய தகவல்கள், அனுமதிகளின் நிலைதனைக் கண்காணித்தல், தெளிவுகள் / சந்தேகங்கள் எழுப்புதல் போன்ற சிறப்பம்சங்கள் இந்தச் செயலியில் இடம் பெற்றுள்ளன.

மேலும், கொடிசியா அமைப்பின் பொன்விழா நிறைவையொட்டி காலப்பேழை புத்தகத்தை (Coffee Table Book) முதல்வர் வெளியிட்டார்’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.