சென்னை: முதல்வரின் முகவரித் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தினார்.

முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகளை ஒருங்கிணைத்து, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் உதவி மையம், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை  அமைப்பு ஆகியவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இனி அவை அனைத்தும் ஒரே துறையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறைக்கு,  முதல்வரின் முகவரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் முதல்வரின் முகவரி துறைக்கு, சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறையில் மனுக்களுக்கு தீர்வு காண, ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த துறை தொடர்பாக ஆய்வு கூட்டம் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில்,  பொதுமக்களின் மனுக்கள், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்ததார். மேலும் மனுக்களை கிடப்பில் போடாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தினார்.