சென்னை: சென்னை காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் மாநிலக்கல்லூரியில்,  இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று திறந்து வைக்கிறார்.

தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் ஏப்ரல் மாத கூட்டத்தொடரின்போது,    விதி 110 ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் வி.பி.சிங் சிலை புதிததாக அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று  காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருரை ஆற்றுகிறார்.

இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மேலும் இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

வி.பி.சிங் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயம் அமைத்துத் தந்ததுடன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு பணிகளில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.