சென்னை:  மாநில தலைநகர் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் பணிகளை அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மீண்டும்,  தேனாம்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டார்.

மழைக்காலத்தின் போது கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளான  வேப்பேரி, பெரம்பூர், புளியந்தோப்பு, தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம் பாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  தேனாம்பேட்டையில் இன்று காலை திடீர் ஆய்வு- மழைநீர் வடிகால் பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஏற்கனவே கடந்த வாரம், வேப்பேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், திரு.வி.க.நகர் பகுதிகளில் நடைபெற்ற பணிகளை  பார்வையிட்ட நிலையில்,  இன்று தேனாம்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

தேனாம்பேட்டை செனடாப் சாலை, மூப்பனார் பாலம் அருகே ரூ.2 கோடியே 14 லட்சம் மதிப்பில் 870 மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வருகிறது. இதை பார்வையிட்ட ஸ்டாலின்,  இந்த பணிகள் எப்போது முடிவடையும் என்றும் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். அடுத்த மழை வருவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து,  சீதம்மாள் காலனி சி.வி.ராமன் சாலையில் ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் 610 மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டார். இந்த பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சரின் இந்த திடீர் ஆய்வின்போது,  அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட செயலாளர் மயிலை வேலு, கவுன்சிலர் ஷீபா வாசு மற்றும் முக்கிய அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.