சென்னை: தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் வருமுன் காப்போம் முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பயனர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் வருமுன் காப்போம் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் கடந்த மாதம், சேலம் வாழப்பாடியில் தொடங்கி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி,  நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம், அந்த நோயின் தீவிரத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும். மேலும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை, 2 கோடிக்கு மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், இன்று முதல்வரின் தொகுதியான சென்னை கொளத்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வருமுன் காப்போம் முகாமை தொடக்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோருக்கு பல நலத்திட்டங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.