சென்னை:
பொங்கல் பண்டிகையின் போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 பயனாளிகளுக்கு தலா ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக ரூபாய் 2357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி கடந்த மூன்றாம் தேதி தொடங்கி நேற்று வரை நியாய விலை கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்க வழங்கினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் அருகே உள்ள போர் நினைவுசின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உள்ளார்.