சென்னை:
பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்து.  அவற்றில் பலவும் இந்தியாவைத் தொழில் மயமான – தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்கு, மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதனால், அந்நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும் உரிமையும் உள்ளது” என்று கூறியுள்ளார்.
எனவே, மத்திய அரசினுடைய பொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இந்நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுடனும் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இதுபோன்ற பெரிய முடிவுகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.