சென்னை:
மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்தியாவின் கடல் எல்லைக்குள் ஊடுருவி சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருவது அண்மையில் அம்பலமானது. மேலும் சீனா ஆதரவு இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவால் தமிழக மீனவர்களுக்கு எதிராக ஈழத் தமிழ் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் உச்சமாக தமிழக மீனவர்களிடம் இருந்து சிறைபிடிக்கப்பட்ட படகுகளை இலங்கை அண்மையில் ஏலம்விட்டது. தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் டக்ளஸ் தேவானந்தா தூண்டுதலில் இந்த படகுகள் ஏலம் விடப்பட்டன.

இந்நிலையில் தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு ரோந்து என்ற பெயரில் ஊடுருவிய இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி 12 பேரை கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளையும் சிறைபிடித்தனர்.

தற்போது கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்ப்படையால் தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.