சென்னை: தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்து அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து வெற்றிபெற்ற 28 மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கி கவுரவித்தார். இளநிலை படிப்பை முடித்த சென்னை, மதுரை மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் 28பேர், தமிழக பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவக்கல்லூரிகளில் தேர்வாகி படிப்பை முடித்தவர்களை பாராட்டினார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 2016-ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் மாநில பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 2022-ஆம் ஆண்டு இளங்கலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேந்த 28 மாணவ, மாணவியர்கள் மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களைபெற்றுள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் அளித்து அவர்களை ஊக்குவிக்கிறது. இங்கு படிக்கும் மாணவர்கள், தங்களின் திறமையை இந்திய அளவில் வெளிப்படுத்தி வருகின்றனர். மாநில பாடத்திட்டத்தில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்கள், திறமையாக படித்து, அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர் என்பதாலேயே தமிழக அரசு, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் என்னும் நுழைவுத் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருவதோடு, அதனை ரத்து செய்யவும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிறந்தவர்கள் என்பதை பறைசாற்றும் விதமாக, மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் பெற்ற சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை – கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை-ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம்-அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 28 மாணவ, மாணவியர்களை இன்று முதல்வர் முக.ஸ்டாடலின் தலைமைச் செயலகத்தில் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஸ்டெதாஸ்கோப் மற்றும் மருத்துவச் சிகிச்சை கையேடு அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

இம்மருத்துவ மாணவர்கள் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தேர்வுகள் தவிர, ஒவ்வொரு துறையாலும் நடத்தப்படும் சிறப்பு பதக்கத் தேர்வுகளிலும் பங்கேற்று மூன்று பதக்கங்களுக்கு மேல் வென்றவர்கள். இந்த பதக்கத் தேர்வுகள் எழுத்து தேர்வு, செயல்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மிக கடினமான முறைமைகளை கொண்டதாகும். அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ”கல்லூரியின் சிறந்த மாணவர்” என்ற சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர், ஓமந்தூரார் அரசு மருத்துக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.