சென்னை: மின்னணு தகவல் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்வரின் அலுவலக அறையில் இருந்தே அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் மீதான நடவடிக்கையை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை (CM dashboard) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, அலுவல் பணிகளை கண்காணித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடந்த செப்டம்பர் மாதம் அனைத்துத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, மாநில அரசின், அனைத்து துறை சார்ந்த திட்டங்கள், செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என கூறியிருந்தார்.  இதையடுத்து,  முதலமைச்சர் அறையில் மின்ணணு பலகை மூலம் அரசின் திட்டங்களின் நிலையை கண்காணிக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.  தமிழ்நாடு 360 என்ற இந்த திட்டம் மூலம், அரசின் துறை சார்ந்த தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையிலும், ஆட்சி நிர்வாகத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் முதலமைச்சர் தகவல் பலகை உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டேஸ்போர்டு (CM dashboard)  எனப்படும் மின்னணு தகவல் பலகையில் தேர்தல் வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீதான நடவடிக்கைகள்,நிதி ஒதுக்கீடு, பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் இடம்பெறும் எனவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி மாநில அரசின் 42 துறைகளின் செயல்பாடுகளையும் முதல்வர் தனது அறையில் இருந்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தகவல் பலகை உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,தமிழக அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தகவல்களை முதல்வர் தனது அறையிலிருந்து கண்காணிப்பார். எந்த பகுதிகளில் என்ன பணி நடைபெறுகிறது?,எங்கு தாமதம் ஏற்படுகிறது? என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,ஒவ்வொரு துறை செயலர்களும், அவர்களின் துறை சார்ந்த தகவல்கள் மட்டுமே பார்க்க முடியும் என்றும் தகவல் பலகையை கொண்டு வாரம் ஒருமுறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்துவர் எனவும் கூறப்பட்டுள்ளது.