வேலூா்: பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் ரூ.53.13 கோடி மதிப்பீட்டில் வேலூா் புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

2நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், அங்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.  பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் ரூ.53.13 லட்சம் செலவில், 9.25 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 37,224 சதுரமீட்டராகும். இதில், 3,187 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டுமானம் செய்யப் பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 84 பேருந்துகள் வந்து செல்லக்கூடிய வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புதிய பேருந்து நிலையத்தில் 82 கடைகள், 3 உணவகங்கள், 75 இருக்கைகளுடன் 11 இடங்களில் பயணிகள் காத்திருப்பு பகுதிகளும், தாய்ப்பால் ஊட்டும் அறையும் கட்டப்பட்டுள்ளன. 96 இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளன.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, வேலூா் கோட்டை மைதானத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.