சென்னை:  சுவிஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை  பி.வி.சிந்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உளளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில்  நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.  தாய்லாந்தைச் சேர்ந்த பூசனனுடன் நடைபெற்ற இறுதிப் போட்டி 49 நிமிடங்கள் நடைபெற்றது. இதில், 21-16, 21-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, பி.வி.சிந்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.  பி.வி.சிந்து, இதுவரை பூசனனுடன் 17 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதில் 16 முறை சிந்து வெற்றி பெற்றிருக்கிறார். 2019ல் ஹாங்காங் ஓபனில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார்.

இந்த சீசனில் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் சிந்து.  அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவருக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுளளார். அதில்,  “தனது ஆதிக்கமிகுந்த அபார ஆட்டத்தால் ஸ்விஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி. சிந்து மீண்டும் ஒரு முறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும்.

அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து நமது இளைஞர்களுக்கு உந்துவிசையாக விளங்க எனது வாழ்த்துகள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.