சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என சென்னையில் கொரோனா பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மத்தியஅரசு, நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்றுமுதல் நாடு முழுவதும் 75 நாட்களுக்கு இலவசமாக 18வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும்  2,590 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.  சென்னையில் கொரோனா பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டத்தை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் இனி ஒருவாரம் விட்டு தான் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, வரும் 24-ஆம் தேதி 50 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என்றும் தினமும் 2,950 இடங்களில் தடுப்பூசி போடப்படும் எனவும் கூறினார். தமிழகத்தில் முதல், இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் என மொத்தம் 4.77 கோடி பேர் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறினார். முதல்வரிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்ததாக தெரிவித்த அமைச்சர், அவரிடம்,  தாம் நன்கு குணமடைந்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார் எனவும் தெரிவித்தார்.  மேலும், ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த 4 மருத்துவமனைகளும் மூடப்படும் என்றும் கூறினார்.