சென்னை

லைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்த வார இறுதியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அந்த சந்திப்பில், 

”தமிழகம் முழுவதும் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுபவர்களிடம் இருந்து வேட்புமனுக்களைப் பெறும் நடவடிக்கை 20-ந்தேதி (நேற்று) தொடங்கியது. 

தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.தேர்தல் தொடர்பான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்பதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்த தகவல் அந்தந்த கட்சிகளின் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேட்புமனு தாக்கல் செய்யும் காலகட்டம் என்பதால் இந்த வார இறுதி நாளில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தும்படி கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். தேர்தலையொட்டி காவல்துறை தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.  

கோவையில் 18-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில், சீருடையில் பள்ளி மாணவிகள் பங்கேற்றது தொடர்பான முதல்கட்ட விசாரணையில், பிரதமர் ரோடு ஷோ சென்ற பகுதியில்தான் சம்பந்தப்பட்ட பள்ளி உள்ளது என்றும் பிரதமர் வரும்போது குழந்தைகள் ஆர்வத்துடன் அவர்களாகவே பள்ளிக்கு வெளியே வந்து பிரதமரைப் பார்த்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்ததும் அது தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்”. 

என்று சத்யபிரதா சாகு கூறினார்.