சென்னை: சிதம்பரம் கோவிலில் கனகசபை தரிசனத்துக்கு அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால், கனகசபை மண்டபத்தில் இருந்து தரிசனம் மேற்கொள்ள அனுமதி கோரி கடலூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி  முனீஷ்வர்நாத் பண்டாரி நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தான் கனகசபை மண்டபத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் எந்த பொது நலனும் இல்லை எனவும் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.