சென்னை:
மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா சார்பில் 2 ஆடவர் அணியும், 2 மகளிர் அணியும் போட்டியில் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணிக்கும் தலா 5 வீரர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 20 வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

20 பேர் கொண்ட இந்திய அணிக்கு அனுபவம் வாய்ந்த மூத்த செஸ் வீரரும் கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ், சசிகிரண், அதிபன் ஆகியோர் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.