சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெறும் சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தியாவில் முதன்முதலாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டி  நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.  அவர்கள் வருகை தந்துகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தமிழகஅரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா நாளை (ஜூலை 28) மாலை, சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநயத்துடன் பாரம்பரிய முறையில் அரங்குகள் அமைக்கப் பட்டு வருகிறது. மேலும், 5 அடுக்கு  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரு ஸ்டேடியம் சென்ற தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள அதிகாரிகளிடம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். முதல்வர் ஸ்டாலினுடன்  அமைச்சர்கள் மெய்யநாதன், எ.வ.வேலு, சேகர்பாபு  உடனிருந்தனர்.