சென்னை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செந்தில் பாலாஜி கைதான பிறகும் அமைச்சராகத் தொடர்கிறார் என வினா எழுப்பியுள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாளை வரை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 ஆவது முறையாகக் கடந்த சில நாட்களுக்கு முன் மனுத் தாக்கல் செய்தார். இன்று இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இருதரப்பு வாதங்களைக் கேட்ட பின்பு,

”ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளார் எனச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் ஜாமீன் மனுவை ஆராய்ந்ததில் கடந்த முறை மறுத்த சூழல்கள் மாறியதாகத் தெரியவில்லை. 

ஒரு கடைநிலை ஊழியர் கைதானால் 48 மணி நேரத்தில் இடைநீக்கம் செய்யப்படுகிறார், 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்துக்குச் சொல்கிறீர்கள்? சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தானே? 

என வினா எழுப்பி உள்ளார்.

பிறகு நீதிபதி செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.