சென்னை: நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் திரையிடலில், 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற விதிமுறையைப் பின்பற்றாத தியேட்டர்களின் மேலாளர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தியேட்டர்களில், அக்காவல் நிலையத்தார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காசி தியேட்டர் உள்ளிட்ட சில தியேட்டர்கள், மாஸ்டர் திரைப்படக் காட்சியில் 100% இருக்கைகளை நிரப்பியது தெரியவந்தது.

இந்தவகையில், மொத்தம் 10 தியேட்டர்களின் மேலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“மேலும், குரோம்பேட்டை, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை, வில்லிவாக்கம் போன்ற பகுதிகளிலுள்ள தியேட்டர்களும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விஜய் ரசிகர்கள், மெய்மறந்து தியேட்டருக்குள் உள்ளேயுள்ள நிலையை சமூகவலைதளத்தில் பதிவுசெய்த காரணத்தால், பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன” என்று ஒரு மாநகர காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.