சென்னை

ங்க தேசத்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து கடத்தி வரும் கும்பலைச் சென்னை காவல்துறையினர் கண்டறிந்து 7 பேரைக் கைது செய்துள்ளனர்

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தற்போது ரெம்டெசிவிர்  மருந்துகக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.   தேவை அதிகரித்துள்ளதால் தமிழக அரசே இந்த மருந்துகளை மருத்துவ சான்றிதழின் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறது.   இதை வாங்கக் கூட்டம் அலைமோதுவதால் இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி பலர் வெளிநாடுகளில் இருந்து இந்த மருந்தைக் கடத்தி வந்து அதிக விலைக்கு விற்கின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் மூலம் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை காவல்துறையினர் தங்களுக்கு மருந்து தேவை என அந்த எண்ணுக்குக் கோரிக்கை விடுத்தனர்.  மருந்தை விநியோகம் செய்வதாக விஷ்ணு குமார் என்பவர் முன் வந்துள்ளார்.  இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருந்தாளராகப் பணி புரிபவர் ஆவார்.

இவரிடம் விசாரணை செய்ததில் கிடைத்த தகவலின் பேரில் இந்த மருந்துகளை அவர் கோவில்பட்டியில் உள்ள சண்முகம் என்பவரிடம் இருந்து வாங்குவதாக தெரிவித்ஹ்டுள்ளார்.  விஷ்ணு ஏற்கனவே 3 டோஸ் மருந்துகளை விற்பனை செய்துள்ளார்.  அவரிடம் இருந்து 7 டோஸ் மருந்துகள் பிடிபட்டன.  கோவில்பட்டியில் நேற்று முன் தினம் இரவு சண்முகம் மற்றும் அவர் சகோதரர் 42 டோஸ் மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொடுத்த தகவலின்படி பிரவின் குமார் என்பவரிடம் சண்முகம் மருந்துகளை வாங்கியது தெரிய வந்துள்ளது.  பிரவின் குமார் கைது செய்யப்பட்டு அவர் மதுரவாயலில் உள்ள மெடிஸ்டார் ஹெல்த் லிமிடட் என்னும் மருந்து நிறுவனம் இந்த மருந்தை விற்பதைத் தெரிவித்தார்.

அந்த நிறுவன உரிமையாளர் புவனேஸ்வர் கைது செய்யப்பட அவர் ராஜஸ்தானில் உள்ள நிஷித் பண்டாரி என்பவரிடம் ரெம்டெசிவிர் வாங்குவதை ஒப்புக் கொண்டுள்ளார்.  தற்போது நிஷித் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார்.   இந்த மருந்துகள் வங்க தேசத்தில் இருந்து கடத்தி வரப்படுவது தெரிய வந்துள்ளது.  கைதானோரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.