சென்னை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஐபிஎல் டிக்கட்டுகளை பயணச்சீட்டாகப் பயன்படுத்த இயலாது என அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.  அதில்,

“இந்த ஆண்டு நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் சீசன் தொடரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்கஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது. எனவே ஐபிஎல் போட்டிகளுக்கான பார்கோட் (Barcode) போடப்பட்ட கியூஆர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் ரசிகர்கள் பயணித்து வந்தனர்.

தொடர்ந்து நடக்க இருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் சுற்றுகள் முற்றிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஐபிஎல் டிக்கெட்டுகளை மெட்ரோ ரயில் பயணச்சீட்டாகப் பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மே 23 மற்றும் 24ம் தேதிகளில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளைக் கண்டுகளிக்க வருகைதரும் கிரிக்கெட் ரசிகர்கள், மெட்ரோ பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு வழக்கமான மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயணிகள் மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளை வாஸ்அப் (91-8300086000), க்யூஆர் அல்லது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனென்றால் மெட்ரோ ரயில் டிக்கெட் கவுன்டர்கள் இரவு 11  மணிக்குப் பிறகு செயல்படாது  ஆயினும் சென்னையில் போட்டி நடைபெறும் நாட்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக மே 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களிலும் இரவு 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மெட்ரோ ரயிலின் நீல வழித்தடத்தில், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பச்சை வழித்தடத்தில் பயணிப்பதற்கு பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாறிக்கொள்ளலாம். நீல வழித்தடத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்குப் பயணிகள் மாறும் வசதி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரவு 11 மணிக்குப் பிறகு இருக்காது.

ஆகவே நீல வழித்தடத்திலிருந்து பச்சை வழித்தடத்திற்கு மாறும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.