சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை , திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

வரும்  28ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்  மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரையும்,  குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.