சென்னை: சென்னை உயர்நீதி மன்றம் மற்றும்  மதுரை உயர்நீதி கிளைக்கும் நாளை (ஏப்ரல் 30ந்தேதி) முதல் ஜூன் 5ந்தேதி வரையிலான  37 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டங்களில் அவசர வழக்குகளை விசாரிக்க 21 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சென்னை  உயர்நீதிமன்றத்துக்கும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கும் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்படும்.  அந்தவகையில் இந்த ஆண்டு நாளை முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் கே. கோவிந்தராஜன் திலகவதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், மே மாதத்தின்  முதல் வாரம் மட்டும் திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை மனுத்தாக்கல் செய்யலாம் என்றும், அவை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் வழக்கறிஞர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும்  அவை புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் விசாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  அவசர வழக்குகளை விசாரிக்க , நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஏ.ஆனந்தி, பி.வேல்முருகன், ஜி.சந்திரசேகரன், ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி, நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், நீதிபதி வி.சிக்ஞானம், எஸ்.எம்.சுப்ரமணியம், ஜே.சத்தியநாராயண பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், சி.சரவணன், ஆர்.ஹேமலதா, எம்.எஸ். , முகமது ஷபீக், சி.வி.கார்த்திகேயன் மற்றும் பி புகழேந்தி உள்ளிட்ட 21 நீதிபதிகள்  சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நீதிபதி   பாரத சக்கரவர்த்தி உள்ளிட்ட 15 நீதிபதிகள் மதுரை பெஞ்சில் இருந்து வழக்குகளை விசாரிப்பார்கள்.

இந்த ஆண்டு ( 2022 )  கோடை விடுமுறையின் போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் (முதன்மை அமர்வு மற்றும் மதுரை பெஞ்ச் ஆகிய இரண்டும்) பதிவுத்துறையின் வேலை நேரம், நீதிமன்ற அமர்வு நாட்களைத் தவிர, அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4.45 மணி வரை செயல்படும்.

இவ்வாறு  அறிவிக்கப்பட்டுள்ளது.