சென்னை: உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில், முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court. (File Photo: IANS)

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையமானது, 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்காக, கடந்த ஜனவரியில் எழுத்துத் தேர்வை நடத்தியது.  ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுதினர். 5,275 பேர் தேர்ச்சி பெற்றதாக, மார்ச்சில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த கோரி, டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தன் மனுவில் கூறி உள்ளதாவது: பொதுப் பிரிவு, காவல் துறையினருக்கான தனிப்பிரிவு என 2  பிரிவுகளிலும் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பிட்ட சில மையங்களில் தேர்வு எழுதியவர்கள் வரிசையாக தேர்ச்சி பெற்றனர்.

தனியார் பயிற்சி மையங்களும் முறைகேட்டில் உடந்தையாக செயல்பட்டன, மேலும் தேர்வு அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை, செல்போன்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் மனுவில் கூறி இருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, பதிலளிக்க தமிழக அரசு, சீருடை பணியாளர் தேர்வாணையம், மற்றும் டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளனர்.