சென்னை; அதிமுக தலைமை அலுவலகம் மீது வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்றுங்கள் என தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும்,  அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தின் சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 17ந்தேதி அதிமுக பொதுக்குழு வானகரத்தில் நடைபெற்றபோது, பூட்டப்பட்டிருந்த அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் தரப்பினர் கடப்பாறையைகொண்டு உடைத்து உள்ளே சென்றனர். அதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்தனர். இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையையும் காவல்துறையினர் வேடிக்கை பார்த்னர். இறுதியில்தான் தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தியதுடன், ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை எடுத்துச்சென்ற பிறகே அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அவசரம் அவசரமாக சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, தமிழகஅரசின் நடவடிக்கையை நீதிமன்றம் விமர்சித்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில்,  அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை உடனே அகற்றுமாறு உத்தரவிட்டதுடன்,  அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு  உத்தரவிட்டுள்ளது.  மேலும்,அதிமுக தலைமையகத்தில் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது என்றும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போதிய பாதுகாப்பினை காவல்துறை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.