சென்னை: செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனால் இந்த வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி கடந்த 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இடி அனுமதித்தது. ஆனால், அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புவதாக கேட்டுக்கொண்டதால், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியது. அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி,  அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் நிஷா பானு , பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின்போது,  அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது என்றும் செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை உள்ளிட்ட வாதங்கள் நீதிபதிகளின் முன்னிலையில் வைக்கப்பட்டது.

அதே சமயம் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி , அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறினார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி இன்று காலை 10:30 மணி அளவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர்.  அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கியுள்ளார். ஆனால்,  மற்றொரு நீதிபதியான பரத சக்ரவர்த்தி. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல  என்றும்,  நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என்றும்  செந்தில்பாலாஜியை சிறையில் அடைக்கவும்  உத்தரவிட்டுள்ளார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளதால், இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது உச்சநீதி மன்றமே விசாரணை நடத்தும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.