சென்னை: கட்டுமான நிறைவுச் சான்று இல்லாமலேயே மின் இணைப்பு அனுமதி பெறலாம் என்ற தமிழகஅரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழத்தில், புதிய கட்டடங்கள் கட்டும்போது,  மின் இணைப்பு பெற கட்டட கட்டுமான நிறைவு சான்று கட்டாயம் என மின்வாரியம் ஏற்கனவே ஆணை பிறப்பித்து உள்ளது.  இந்த ஆணையை  சமீபத்தில் திடீரென ரத்து செய்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கட்டுமான நிறுவனங்களின்  வேண்டுகோளை ஏற்று, இந்த ஆணை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி உள்பட அரசியல் கட்சிகள் குரல் எழுப்பின. கனிமொழி பதிவிட்டிருந்த டிவிட்டில்,  ‘கட்டுமான பணி நிறைவு சான்று’ இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்பட மாட்டாது என்ற ஆணையை தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டி அவசியம் என்ன ? இந்த விதியையும் நீக்கினால் அனுமதியை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை ? ஆட்சி முடிய இன்னும் ஆறே மாதங்கள் இருப்பதால் அதற்குள் வசூலை அதிகரிக்கும் பொருட்டா ?  என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும்,  நகர்ப்புறங்களில் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு வசதி செய்து கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, கட்டுமான நிறைவுச் சான்று இல்லாமலேயே மின் இணைப்பு அனுமதி பெறலாம் என்ற தமிழக அரசன் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.