சென்னை: சென்னையில் வெள்ளப்பாதிப்புக்கு காரணமாக ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் கடுமையாக உள்ளதாகவும், உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும் ஆட்சியாளர்களை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. அதனால்,  இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு தாமாக முன்வந்து வழக்குத் தொடர வேண்டும் என முறையிட்டார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,   தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் மழை வெள்ள பாதிப்புகளைச் சீராக்க நடவடிக்கைகைள் எடுத் துவருவதாகக் குறிப்பிட்டதுடன்,  அவை செயல்படுவதற்கு முழுவதும் அனுமதிக்க வேண்டும் என விளக்கம் அளித்தனர். தற்போதைய நிலையில் அரசின் பணியில் தலையிட முடியாது எனக் கூறி தாமாக முன்வந்து பொதுநல வழக்கை எடுக்க மறுத்துவிட்டனர்.