சென்னை

ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் குறித்து அதிமுக அளித்த மேல் முறையிட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 24ம் தேதி முந்தைய அதிமுக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றக் கையகப்படுத்திப் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி தீர்ப்பளித்திருந்தார்.

தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்தியாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது.  இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பு வழங்கினர்.

தீர்ப்பில்,

”ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியதை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவு செல்லும். ஜெயலலிதாவுக்கு 2வது நினைவிடம் தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறு இல்லை.

அரசு வேதா இல்லத்தைக் கையகப்படுத்திய நடவடிக்கைகள் முறையாக இல்லை, விதிமீறல்கள் உள்ளன என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு சரியே.

ஜெயலலிதா இல்லம் பொது நோக்கத்திற்காகக் கையகப்படுத்தப்படவில்லை. மாறாக அரசியல் காரணத்துக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்,”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.