சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்க ஆணையத்துக்கு உத்தரவிட மறுத்துள்ளது,

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. இங்கு ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ களமிறங்கியுள்ளார். தனக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ விண்ணப்பித்தார். ஆணையம் அதை பரிசீலிக்கவில்லை.

எனவே, தங்களுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி ம.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது  இது குறித்து விளக்கம் அளிக்கத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ம.தி.மு.க  ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்கமுடியாது என்று மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது. ஒரு கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சின்னத்தை ஒரு தொகுதிக்காக பொது சின்னமாக அறிவிப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இன்று பிற்பகல் பம்பரம் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்க உத்தரவிடக்கோரி ம.தி.மு.க. தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் குறைந்தது 2 தொகுதியில் போட்டியிடாததால் பம்பர சின்னத்தை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்கிறோம் எனக் கருத்து தெரிவித்து, நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது என்று கூறி ம.தி.மு.க. தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.