சென்னை:

டசென்னையில் பிரபலமான, வண்ணாரப்பேட்டை 2 ரூபாய் டாக்டர் கடந்த ஆண்டு இறுதியில் மரணம் அடைந்த நிலையில், மருத்துவர்களான அவரது மனைவி மற்றும் மகன்கள் மக்களுக்கு தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வருகின்றனர். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் புகழ்பெற்ற இடங்களில்  ஒன்றான பழைய பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக  டாக்டர் ஜெயச்சந்திரன் என்பவர் அந்த பகுதி மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வந்தார். ஆரம்பத்தில் ரூ.2 கட்டணமாக வாங்கியவர், பின்னர் ரூ.5 ஆகவும், கடைசியில் ரூ.10ம் கட்டணமாக வசூலித்து வந்தார்.

இவரது சிகிச்சைக்கு அந்த பகுதியில் பெரும் வரவேற்பு உண்டு. 2ரூபாய் டாக்டர் என்றே மக்களால் அன்போது அழைக்கப்பட்டு வந்தார். இவர் கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதம் 18-ந்தேதி மரணம் அடைந்தார்.அவரது மறைவு வடசென்னை மக்களுக்கு பேரிடியாக இருந்தது.

2 ரூபாய் டாக்டர்  மறைந்து விட்டதால் அந்த ஆஸ்பத்திரி இனி செயல்படாது  கூறப்பட்டு வந்தது. ஆனால், அவரது மரணத்துக்கு வந்திருந்த மக்கள் கூட்டத்தை கண்ட அவரது குடும்பத்தினர், அவரது வழியிலேயே மருத்துவமனையை தொடர்ந்து நடத்த முடிவெடுத்தனர்.

அதன்படி தற்போது 2ரூபாய் டாக்டரின் மருத்துவமனை தொடர்ந்து செயல்படுகிறது. காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, மறைந்த மருத்துவர் ஜெயச்சந்திரனின் மனைவி, மருத்துவர் கிருஷ்ணவேணி, அவரது மகன்களான மருத்துவர்கள் சரவணன், சரத் ராஜ் ஆகியோர் இணைந்து மருத்துவ சேவை அளித்து வருகின்றனர்.

இவர்கள் தாங்கல்  பார்க்கும் மருத்துவத்திற்கு கட்டணம் எதுவும் கேட்பதில்லை. அதற்கு பதிலாக நோயாளிகள் விரும்பும் பணத்தை, அங்கு வைக்கப்பட்டுள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் படத்தின் முன்பு வைத்துவிட்டு செல்லும்படி கூறுகிறார்கள்.

2ரூபாய் டாக்டரின் மருத்துவமனை மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது

தொடரட்டும் அவர்களின் மக்கள் சேவை…