சென்னை:  வாக்காளர் சரிபார்க்கும் பணி கணக்கெடுக்க வருபவர்களுக்கு ஒத்துைழப்பு தாருங்கள் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு பணி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.  அதனை தொடர்ந்து ஜனவரி 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி முன்திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். சரிபார்ப்பு பணி முதற்கட்ட பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்க உள்ளனர். இந்த பணி நேற்று தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாக, விரைவாக மற்றும் 100 சதவீதம் தூய்மையாகவும் முடிக்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பணியை விரைவாக நடத்தி முடிக்க பொது மக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வரும் 5.1.2024-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களையும் சரிபார்க்கும் பணி இன்று 21.07.2023 முதல் 21.08.2023 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து, இப்பணியை விரைவாக நடத்தி முடிக்க பொது மக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.