சென்னை: குடிநீர் குழாய் பராமரிப்பு காரணமாக, தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்பட வடசென்னையின்  5 மண்டலங்களில்  ஜூலை 25-ம் தேதி, 26ந்தேதி ஆகிய 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   சென்னை குடிநீர் வாரியம் தகவல் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 1050 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன் 1000 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாய் இணைக்கும் பணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்படுவதால்,

வரும் 25.07.2023 அன்று காலை 10.00 மணி முதல் 26.07.2023 காலை 10.00 மணி வரை மண்டலம்-4 (தண்டையார்பேட்டை), மண்டலம்-5 (இராயபுரம்), மண்டலம்-6 (திரு.வி.க நகர்), மண்டலம்-8 (அண்ணா நகர்) மற்றும் மண்டலம்-9 (தேனாம்பேட்டை)-க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் <https://cmwssb.tn.gov.in> என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.