சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் எந்தெந்த இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து  பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

இதில் 200 வார்டுகளுக்கான வேட்பு மனுக்களை பெறுவதற்கு 37 உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 200 வார்டுகளுக்கு 15 மண்டல அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 முதல் 14 வார்டுகளுக்கு திருவொற்றியூர் மண்டல அலுவலகத்திலும், 15 முதல் 22 வரையிலான வார்டுகளுக்கு மணலி மண்டல அலுவலகத்திலும், 23 முதல் 33 வரையிலான வார்டுகளுக்கு மாதவரம் மண்டல அலுவலகத்திலும், 34 முதல் 47 வரையிலான வார்டுகளுக்கு தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்திலும், 49 முதல் 63 வரையிலான வார்டுகளுக்கு ராயபுரம் மண்டல அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

64 முதல் 78 வரையிலான வார்டுகளுக்கு திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்திலும், 79 முதல் 93 வரையிலான வார்டுகளுக்கு அம்பத்தூர் மண்டல அலுவலகத்திலும், 94 முதல் 108 வரையிலான வார்டுகளுக்கு அண்ணாநகர் மண்டல அலுவலகத்திலும், 109 முதல் 126 வரையிலான வார்டுகளுக்கு தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்திலும், 127 முதல் 142 வரையிலான வார்டுகளுக்கு கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்திலும், 143 முதல் 155 வரையிலான வார்டுகளுக்கு வளசரவாக்கம் மண்டல அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

156 முதல் 167 வரையிலான வார்டுகளுக்கு ஆலந்தூர் மண்டல அலுவலகத்திலும், 168 முதல் 180 வரையிலான வார்டுகளுக்கு அடையாறு மண்டல அலுவலகத்திலும், 181 முதல் 191 வரையிலான வார்டுகளுக்கு பெருங்குடி மண்டல அலுவலகத்திலும், 192 முதல் 200 வரையிலான வார்டுகளுக்கு சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.90 ஆயிரம் வரை மட்டுமே செலவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பணம் மற்றும் பொருட்கள் ஆவணங்களின்றி கொண்டு செல்வதை கண்காணித்து பறிமுதல் செய்ய ஒரு மண்டலத்திற்கு சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் 45 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.50 ஆயிரத்து மேல் அல்லது வாக்காளர்களை கவரும் வகையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும்.

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.  தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7012 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், http://election.chennaicorporation.gov.in/gcculb22/complaints/என்றமாநகராட்சியின் இணையதளம் மூலமும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.