சென்னை: திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர் சரஸ்வதி  காலமானார்.  இவர் சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் திமுக 153, அதிமுக 15, காங்கிரஸ் 13, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 4 உறுப்பினர்கள் உள்ளனர். ஏற்கனவே 3 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 4வதாக மேலும் ஒரு திமுக பெண் கவுன்சிலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னையில் திமுக கவுன்சிலர் சரஸ்வதி  உயிரிழந்துள்ள திமுகவினரைடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கவுன்சிலர் சரஸ்வதி  மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, 59 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் இறப்பு நமக்கும், கழகத்திற்கும், SM நகர் உட்பட 59-வது வார்டு பகுதி மக்களுக்கும் பேரிழப்பு என்றும்,  அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்  கூறியுள்ளார்.

சரஸ்வதி மறைவையடுத்து சென்னையில் காலியாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே, 122-வது வார்டு திமுக கவுன்சிலர் ஷிபா வாசு, 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத், 146-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் ஆகியோர் உயிரிழந்த நிலையில், தற்போது சரஸ்வதி உயிரிழந்துள்ளார்.