சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட கல்விக்கடன் ரத்து என்ன ஆயிற்று?  திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழ‘னிச்சாமி கேள்வி விடுத்துள்ளார்.

திமுக அரசு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம்’ – என்ற நம்பிக்கையுடன் திமுக, 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியைப் பெற்றது. அத்தேர்தலின் போது, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு சாதித்தது என்ன?

குறிப்பாக, 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில், தலைப்பு 3ல் – மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவலக மொழி; தலைப்பு 6ல் ஈழத் தமிழர் நலன் தலைப்பில் பல வாக்குறுதிகள்; தலைப்பு 7ல் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் அயல் நாடுகளில் தகுதி வாய்ந்த தமிழர்களை இந்திய தூதர்களாக நியமிக்க வலியுறுத்தல்; தலைப்பு 8ல் கச்சத் தீவு பிரச்சனை; தலைப்பு 16ல் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம்; தலைப்பு 20ல் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் வாயு விலை குறைப்பு: தலைப்பு 21-ல் கேபிள் டி.வி. கட்டணக் குறைப்பு; தலைப்பு 23ல் வருமான வரிச் சலுகைகள்; தலைப்பு 25ல் மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு; தலைப்பு 27ல் வேளாண்மை; தலைப்பு 48ல் நீட் தேர்வு ஒழிப்பு: தலைப்பு 47ல் கல்விக் கடன் தள்ளுபடி; தலைப்பு 56ல் தனியார் துறையில் இட ஒதுக்கீடு; தலைப்பு 57ல் சாதி வாரி கணக்கெடுப்பு; தலைப்பு 75ல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி நீக்கம்; தலைப்பு 80ல் தூத்துக்குடி, சேலம் விமான நிலையங்களில் இரவு சேவை என்று சுமார் 100 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் பேலாக நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைக் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒருமுறையாவது திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஏதேனும் பேசினார்களா? சபையின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டங்களிலாவது ஈடுபட்டார்களா ? 2019-ல் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர் என்ற விவரங்களை திமுக தலைவரும், விடியா அரசின் முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிடத் தயாரா? எனது மேற்கண்ட கேள்விகளுக்கான பதில் ‘இல்லை’ என்பதே.

தமிழக மக்களின் கவனத்தை ‘எளிதில் எதையும் மறக்கடித்துவிடலாம்’ என்ற நம்பிக்கையுடன், அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பது திமுக-வின் பரம்பரை பழக்கம்.

2006-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின்போது, “நிலம் இல்லாத அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும்” என்று கருணாநிதி அளித்த வாக்குறுதியைப் போலவே, அவரது வாரிசான ஸ்டாலின், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றி, நிறைவேற்ற முடியாத நூற்றுக்கணக்கான பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றார். 2019-ல் அளித்த வாக்குறுதிகள் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போதும் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றிபெற்றது.

கடந்த 28 மாத கால விடியா திமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள், ஊழல் புகார்கள்; சென்னை உயர்நீதிமன்ற அறிவுரைக்குப் பிறகும் சிறையில் உள்ள ஒருவர் இலாகா இல்லாத அமைச்சர்; ஊழல் பணமான 30,000 கோடியை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுதல் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் அனைத்து ஊடகங்களிலும் அணி வகுத்து வெளிவந்த போதும், விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறிதும் ‘நா’ கூச்சமின்றி 100 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ‘முழு பூசணிக்காயை சோற்றில் பறைப்பது போல்’ அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தல் நேரத்தின் போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000/- வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே என்று, சுமார் 57 லட்சம் விண்ணப்பங்களை நிராகரித்திருப்பது, விடியா திமுக அரசின் பித்தலாட்டத்திற்கு ஓர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மாணவர்களின் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த ஏதேனும் முயற்சிகளை செய்தீர்களா விடியா திமுக அரசின் முதலமைச்சரே? இந்த விடியா திமுக ஆட்சியை நம்பி, கல்விக் கடன் பெற்ற மாணவர்களின் வீடுகளில், கல்விக் கடனை திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி அதிகாரிகள் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர். கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் வங்கி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் (ஜப்தி போன்ற) ஈடுபட நேரிடும் என்று மிரட்டியதாக, கல்விக் கடன் வாங்கிய இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீரோடு தெரிவிக்கின்றனர்.

நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் தான் என்பதை அறிந்திருந்தும், அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், நீட் விவகாரத்தில் அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது தொடங்கி, கல்விக் கடன் ரத்து செய்வது வரை, மாணவர்களை ஏமாற்றி அவர்களின் எதிர்காலத்தை வஞ்சிக்கிறது விடியா திமுக அரசு 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்திட நடவடிக்கை எடுத்து, அவர்களின் துயர் துடைக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன். நூறு சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன என்ற விபரத்தை அறிக்கை மூலம் விடியா திமுக அரசின் முதலமைச்சர் அறிவிப்பாரா? சட்டமன்றத்தில் வெள்ளை  அறிக்கை வெளியிடுவாரா?.

இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.