சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவழை தொடங்கியுள்ளதால், அதை எதிர்கொள்ளும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் உயர் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது. அதற்கான 1913 ஹெல்ப் லைன் எண்ணும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையடுத்த சில மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவீன கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது.   இதன் மூலம் சென்னையில் உள்ள சுரங்க பாதைகளை நேரடியாக கண்காணிக்கவும், சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கினால் உடனடியாக ரெட் அலர்ட் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கவும், பெரிய நீர்த்தேக்கங்கள், முகத்துவாரங்கள் அனைத்தையும் நேரடியாக கண்காணிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணில் ஒரே நேரத்தில் 15 பேர் தொடர்பு கொள்ளும் முடியும். பேரிடர் நேரத்தில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் இந்த கட்டுப்பாட்டு அறையில் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 100 ஊழியர்களை கொண்டு, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 100 இடங்களில் மாநகராட்சி சார்பில் டிஸ்ப்ளே (Display) அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிக தொழில்நுட்ப வசதியுடன் இந்த முறை பருவமழை எதிர் கொள்ள சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மேலும், அவசர காலங்களில் உயர் அதிகாரிகள் இந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து செயல்படுவதற்காக வார்ரூம் (war room) அமைக்கப்பட்டுள்ளது.