சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம்  அதிரடியாக மாற்றி உத்தரவிட்டது.

இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் அதிகாரி பத்மஜா, ஆளும் கட்சிக்கு துணையை செயல்படுகிறார். இதனால் அவரை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்தது. அதேபோல கமிஷ்னர் ஜார்ஜ், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார். எனவே அவரை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து உடனடியாக மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்தது. இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

அதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்ற முடிவு செய்துள்ளதால், புதிய போலீஸ் கமிஷனரை நியமிப்பதற்காக 3 போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. அவரும், தற்போது ஏடிஜிபிக்களாக உள்ள கரன்சின்கா(சிபிசிஐடி), அசுதோஷ் சுக்லா(மதுவிலக்கு), திரிபாதி(சட்டம் ஓழுங்கு) ஆகியோரது பெயர்களை அனுப்பினார்.

அதில் திரிபாதி கடந்த பொதுத் தேர்தலின்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவரது பெயரை தேர்தல் ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அசுதோஷ் சுக்லா, கரன்சின்கா ஆகியோரில் யாரை நியமிப்பது என்று ஆலோசனை நடத்தினர்.

இரண்டு அதிகாரிகளுமே நேர்மையானவர்கள், திறமையானவர்கள். மேலும் அசுதோஷ் சுக்லா கடந்த பொதுத் தேர்தலின்போது ஜார்ஜ் மாற்றப்பட்ட பிறகு, போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டவர். அப்போது ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அவர் மீது குற்றம்சாட்டவில்லை.

இருந்தாலும் இந்த முறை கரன்சின்காவை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டது. இந்த உத்தரவு தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு அனுப்பினார்.

அவர், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்றிவிட்டு, கரன்சின்காவை நியமிப்பதற்கான உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகிறது. ஜார்ஜுக்கு புதிய பதவி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது