theft-mother-cycles
சென்னை,
சென்னையில் பைக் திருடும் கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் இருந்து 18 பைக்குகள், 1 கார் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சென்னை  கே.கே.நகரில் வாகன சோதனையின்போது திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பிடிபட்டனர். அவர்களை விசாரித்தபோது சென்னை முழுவதும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடிவந்த குப்பல் குறித்து தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட  5 பேர் கும்பல்  பிடிபட்டது. அவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய  கார் மற்றும்  திருடப்பட்ட 18 மோட்டார் சைக்கிள் களை  போலீசார் கைப்பற்றினர்.
சென்னை நகரில் சமீப காலமாக விலை உயர்ந்த  மோட்டார் பைக்குகள், செல்போன்கள், செயின் சினாச்சிங் நடைபெற்று வருவது அதிகரித்து உள்ளது.
இதுபோன்ற திருட்டுகளில் சரிவர நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், காணாமல் போனது குறித்து புகார் கூறினாலும், புகார்களை போலீசார் பதிவு செய்வதில்லை என போலீசார் மீது  பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுபற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்கும் படி கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டதை அடுத்து அஷோக் நகர் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
நேற்று வாகன சோதனையின்போது, வெள்ளை நிற மாருதி ஸ்விப்ட் காரில் வந்த ஒரு கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். இதனால் சுதாரித்த காரில் இருந்தவர்கள் தப்பி ஓடமுயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களை  காவல்நிலையம்  அழைத்து வந்து விசாரித்த போது சென்னை, வேலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில், விலையுயர்ந்த பைக்களை திருடி மலிவு விலையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது .
இவர்களுக்கு உதவியாக கே.கேநகரை சேர்ந்த மெக்கானிக் மகேந்திரன்  (எ) மகி, மாங்காடு பகுதியை சேர்ந்த  ராஜேஷ்குமார், தள்ளு வண்டி வியாபாரம் செய்யும் ஜாபர்கான்பேட்டை லட்சுமணன், தொழுதூர் பகுதியை சேர்ந்த ரவி ஆகியோர் கூட்டாக இணைந்து பைக்குகளை திருடி பெரம்பலூர் மாவட்டம் கிரனூர் பகுதியை சேர்ந்த சிவக்குமாரிடம்  பாதி விலைக்கு விற்று வந்துள்ளனர்.
biketheft1
பைக் திருடும் வேலைகளை மெக்கானிக் மகேந்திரனும், வண்டியில் எண்களை மாற்றுவது ராஜேசும், இடத்தை தேர்வு செய்யும் பணிகளை லட்சுமணண், செய்துள்ளனர்.  கார் ஓட்டிக்கொண்டே நோட்டமிட்டு இடம் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தேர்வு செய்து திருடுவது இவர்களது வாடிக்கை. இதை யாரும் சந்தேகப்படாத வகையில் செயல்பட்டு வந்துள்ளனர்.
அவர்களிடமிருந்து  18 விலை உயர்ந்த மோட்டார் பைக் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மாருதி ஸ்விப்ட் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தனிப்படையினரின் அதிரடி வேட்டையில் இதுவரை 40 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
திருட்டு கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பைக்குகள் உரியவரிடம் உடனே ஒப்படைக்கப்படுமா அல்லது கேஸ் அது இது என்று அலைக்கழிக்கப்பட்டு அந்த பைக்குகள் வீணாகுமா என்பது போலீசாருக்குத்தான் தெரியும்.
இதேபோல்  வேளச்சேரி அருகே  இரண்டு சாக்கு மூட்டை நிறைய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்களும் திருட்டு கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு என்ன தண்டனை….-?  இவர்கள் மறுபடியும் இதுபோன்ற திருட்டு செயல்களில் ஈடுபடாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன..?