சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 22ம் தேதி முதல் 29 வரை நடைபெறும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆகையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதையடுத்து இறுதி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வை தவிர்த்து மற்ற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஆனால், கல்லூரி இறுதியாண்டின் பைனல் செமஸ்டர் தேர்வு கட்டாயம்  நடத்தவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவான யூஜிசி அறிவித்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான  இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 22  முதல் 29ம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும், கேமரா, ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்று தெரிவித்து உள்ளது. விடையை தேர்வு செய்யும் வகையிலான கேள்வித்தாள் தயாரிக்கப்படும், முன் மாதிரி தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.