சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2-வது உள்நாட்டு முனையம்  அக்டோபரில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும்,  பழைய வெளிநாட்டு முனையமான டி-4 பகுதியில் தற்பொழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த வெளிநாட்டு முனையம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதில் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இருந்து முழு அளவில் விமான சேவைகள் தொடங்கி நடந்து வருகின்றன. தற்போது சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் 2-வது தளத்தில் புறப்பாடு பகுதியும் கீழ் தளத்தில் வருகை பகுதியும் செயல்பட்டு வருகிறது.

புதிய விமான முனையம் செயல்பாட்டுக்கு வந்ததால், ஏற்கனவே செயல்பட்ட பழைய சர்வதேச விமான முனையம் மூடப்பட்டது.  ஆனால், பயணிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், மூடப்பட்ட பழைய விமானமுனையத்தை சீரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர விமானத்துறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

குறிப்பாக சென்னைவிமான நிலையத்தின் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பழைய சர்வதேச வெளிநாட்டு முனையத்தை, 2-வது உள்நாட்டு முனையமாக மாற்ற விமான நிலைய இயக்குனரகம் முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பழைய வெளிநாட்டு முனையமான டி-4 பகுதியில் தற்பொழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் இருந்த குடியுரிமை பரிசோதனை கவுண்டர்கள் அகற்றப்பட்டு உள்ளன. அதேபோல் கன்வேயர் பெல்ட் அங்கு மாற்றப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி முனையத்தை சுத்தம் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த 2-வது உள்நாட்டு முனையத்தின் பணிகளை விரைந்து முடித்து அடுத்த மாதத்தில்  (அக்டோபர்) திறக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்,. சென்னை விமான நிலையத்தில் 2-வது உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டால் பயணிகள் கூட்டத்தை எளிதில் கையாள முடியும். மேலும் பயணிகளும் வெகு நேரம் காத்திருக்காமல் எந்த முனையத்தில் எந்த விமானம் இயக்கப்படுகிறது என்று எளிதாக கண்டு பிடித்து செல்லலாம்.

மேலும், சென்னை விமான நிலையத்தில் 2 உள்நாட்டு முனையம் செயல்பாட்டுக்கு வந்தால் உள்நாட்டு பயணிகளின் கூட்டத்தை எளிதில் கையாள முடியும். பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியது இல்லாமல் தாங்கள் செல்ல வேண்டிய விமானத்திற்கு எளிதில் செல்லலாம்.

தற்பொழுது டி-1 முனையத்தில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அடாஸ்கா போன்ற விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும். டி-4 முனையத்தில் இருந்து ஏர் இந்தியா, ஏர் ஏசியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.