கன்னியாகுமரி:
ன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ரூ 1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் கடலின் நடுவே இருக்கின்ற பாறையில் விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இதை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றார்கள். இந்த திருவள்ளுவர் சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கமான செயல். கடந்த 2017 ஆம் வருடம் இந்த ரசாயன கலவை பூசப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கடந்த வருடம் ரசாயனக் கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணிகள் நடக்கவில்லை.

இதனை அடுத்து இந்த வருடம் ரசாயனக் கலவை பூச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் திருவள்ளுவர் சிலையை சென்று பார்வையிட்டார்கள். அதன்பின் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ ஒரு கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணி டெண்டரில் விடப்பட்டுள்ளது. ரசாயன கலவை பூசும் பணி இன்று திங்கட்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப்பணி முடிகின்ற வரை திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.