சங்ககிரி: ஒரே நாடு ஒரே வரி திட்டத்தை நடைமுறைப்படுத்தி  நாடு முழுவதும் உள்ள அனைத்து சோதனை சாவடிகளையும் அகற்ற வேண்டும் நாடு முழுவதும் சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும் என  மாநில பாஜக தலைவர்  அண்ணாமலையிடம் லாரி உரிமையாளர்கள் சங்கம் மனு கொடுத்துள்ளது.

தமிழ்நாடு மாநில பா.ஜ.க.  தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும்  பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தென்மாவட்டங்களில் பாத யாத்திரையை முடித்த நிலையில், தற்போது சங்ககிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

சங்ககிரியில் அண்ணாமலையிடம், சங்ககிரி  லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் கந்தசாமி தலைமையில் செயலாளர் மோகன்குமார், பொருளாளர் செங்கோட்டுவேல், இணைச் செயலாளர் முருகேசன் ஆகியோர்  கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில்,

பெட்ரோல், டீசலுக்கு ஒரேவிலை இந்தியா முழுவதும் டீசல், பெட்ரோலுக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடி யில் உள்ளூர் வாகனங்களுக்கு சிறப்பு கட்டணத்தில் அனுமதி வழங்க வேண்டும்.

சுங்க கட்டண செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் புதிய சுங்கச்சாவடிகள் அதிகரித்து வருகிறது.

ஒப்பந்தம் முடிந்த பல சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை அகற்ற பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை மொத்த சுங்க கட்டணத்தையும் லாரி உரிமையாளர்களாகிய நாங்கள் செலுத்த தயாராக உள்ளோம்.  ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சங்ககிரியில் லாரிகளுக்கு என தனியாக தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும்.

லாரி தொழிலுக்கு என சங்ககிரியில் தனி நல வாரியம் அமைத்து கொடுக்க வேண்டும்.

ஆன்லைன் அபராதம் விதிக்கும் பிரச்சனையிலிருந்து லாரி உரிமையாளர்களை காத்திட வேண்டும்.

லாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலையில் 50கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் லாரி பார்க்கிங் அமைத்து கொடுத்தால் வாகனங்கள் சாலையோரம் நிற்காமலும், விபத்து ஏற்படாமலும் இருக்கும்.

ஒரே நாடு ஒரே வரி திட்டத்தை நடைமுறைப்படுத்தி அனைத்து சோதனை சாவடிகளையும் அகற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.