கமல் பதிவிடும் ட்விட்டுகளை புரியவில்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள் என்று அவரது  அண்ணனும் நடிகருமான சாருஹாசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

 

சமீபகாலமாக அரசியல் ரீதியான பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டு வருகிறார். இது தமிழக அமைச்சர்களை ஆத்திரத்துக்குள்ளாக்க.. கமலை கடுமையாக விமர்சித்தனர். முடிந்தால் கமல் அரசியலுக்கு வந்து சேவை செய்யட்டும் என்றனர். இதையடுத்து கமலும் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். கட்சி துவங்க தொண்டர்கள் முப்பது கோடி வசூலித்துத் தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கமல் ட்விட்டர் பதிவுகளும் தொடர்கின்றன. இவை சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், பல (தமிழ்) ட்விட்டுகளுக்கு அர்த்தம் தெரியாமல் மக்கள் குழம்பினர்.  இது குறித்து சமூகவலைதளங்களிலும் பலர் விமர்சித்தனர்.

 

சமீபத்தில்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர்ராஜன், “கமல் ட்விட்டுகளைப் படிக்க ஒரு கோனார் நோட்ஸ் தேவை” என்று கிண்டலாக தெரிவித்தார்.

 

இந்த நிலையில் கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன், இத குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில், “கமல் சொல்வது புரியவில்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள்…! பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு பதிலாக “புரியவில்லை என்கிறர்கள்..! அம்மாவை உயர்நீதிமன்றம் குற்றவாளி என்றது புரியவில்லையா..?அல்லது பிடிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல் பதிவுகளைப் போல சாருஹாசனின் பதிவுகளும் பல புரிவதில்லை என்று சில நெட்டிசன்கள் விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.