சென்னை; வங்கக்கடலில் வரும் 7ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது, இதனால் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது வங்க கடலில் மேற்கு மத்திய பகுதியிலும், ஆந்திர கடல் பகுதிக்கு அருகிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல் பாகிஸ்தான், குஜராத் இடையே அரபிக்கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது 3.5 கிலோ மீட்டர் உயரத்தில் கடல் மட்டத்தில் இருந்து காணப்படுகிறது. ராஜஸ்தான் அருகிலும் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது

இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் மழை கொட்டி வருகிறது. பல மாவட்டங்களில் ஆர்ஞ்சு அலர்ட், சில மாவட்டங்களில் ரெட் அலர்ட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சிதான் மழையின் தீவிரத்தை அதிகப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி  வரும்  7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா அல்லது புயலாக மாறுமா என்று வானிலை ஆய்வு மையம் தெளிவாக கூறவில்லை.  ஆனால், பருவமழை மேலும் தீவிரம் அடைய்ம் என்றும் தரிவித்து உள்ளது.

இந்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் 60கிமீ இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. உள்மாவட்டங்களிலும் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.