சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பணிகளில் ஈடுபட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் 1,000 பேருக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு சான்றுகளை வழங்கினார்.  மேலும், செப்டம்பரில் வாரம் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது,  தமிழகம் முழுவதும் 6.71 லட்சம் மிதிவண்டிகள் ரூ.341 கோடி மதிப்பீட்டில் அனைத்து பள்ளிகளிடம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். அந்த வகையில் சென்னையில் உள்ள 174 பள்ளிகளில் 27,689 மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  தற்போது வழங்கப்படும் மிதிவண்டிகளின் தரம் மாணவ, மாணவிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வந்து விட்டதாக சொல்லமுடியாது. இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நாள்தோறும் 500 என்ற அளவில்தான் கொரானா தொற்று பாதிப்பு உள்ளது. எனினும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தித்தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். எனவே செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வாரத்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் 4 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. எனவே மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக,  மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, முன்னேற்பாட்டு பணிகளுக்காக, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் என 1,000 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இப்பணியாளர்கள், சிறப்பான முறையில் பணிகளை மேற்கொண்டதற்காக,துறை சார்பில் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று இப்பணியாளர்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் இயக்குநர் தீபக் ஜேக்கப், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சம்சத் பேகம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.