சென்னை

ன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்துக்கு வந்து மிக்ஜம் புயல் பாதிப்புக்களை பார்வையிடுகிறார். 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜம் புயல் மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலால் பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.  மக்களை வெள்ள பாதிப்பிலிருந்து மீட்க அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக இன்று சென்னைக்கு வருகிறார். மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் டில்லியில் இருந்து காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 12.15 மணிக்குச் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். பிறகு ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார்.

அவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் ராஜ்நாத்சிங்குடன் செல்கின்றனர். இந்த ஆய்வுக்குப் பின்னர் பிற்பகல் 1.20 மணியில் இருந்து 1.30 மணி வரை முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சந்தித்து புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

அப்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, மிக்ஜம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும், அதை எதிர்கொண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் வீடியோ படக்காட்சி காட்டப்பட உள்ளது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.