துரை

துரையில் எய்ம்ஸ் கட்டுமானம் எப்போது தொடங்கும் என்பது குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.  அதன் பிறகு 2018ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.  அப்போது 48 மாதங்களில் கட்டுமானம் முடிவாகும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது 31 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் சுற்றுச் சுவர் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.   இந்த கட்டுமான பணிகளுக்கான கடன் ஒப்பந்தம் சென்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி அன்று இந்திய மற்றும் ஜப்பானுக்கு இடையே கையெழுத்தானது.  இந்த மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் 150 படுக்கைகள் கொண்ட் தொற்று நோய் பிரிவு உள்ளிட்ட சேவைகள் இணைக்கப்பட உள்ளன.

இந்த திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.1977.80 கோடிகள் எனவும் அதில் 1627.70 கோடிகள் கடனாக பெறவும் மீதத் தொகையை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இந்த திட்ட அமலாக்கக் குழுவில் பதவிகள் உருவாக்கப்பட்டு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா மதுரை எய்ம்ஸ் டெண்டர், மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும்  கட்டுமான பணிகள்  சம்பந்தமாக பல்வேறு தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் கேட்டிருந்தார்.  மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இதற்குப் பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில், “எய்ம்ஸ் கட்டுமான திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதைத் தவிர வேற எந்த டெண்டரும் விடப்படவில்லை. தற்போது வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கும் தேதி இறுதி செய்யப்படவில்லை. .மேலும் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

தவிர எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன கட்டிடங்கள் வரும் என்பது பற்றியும் விரிவான திட்ட மதிப்பீடு பற்றியும் தகவல்களும் இல்லை. மதுரை எய்ம்ஸில் மருத்துவ மாணவர் சேர்க்கை வகுப்புகளைத் தொடங்குவதற்கான முன்மொழிவு  மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது.  விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை ” என்று கூறப்பட்டுள்ளது.