மதுரை: தமிழகத்தில் குப்பைக்கு வரி போட்டது மத்திய அரசு என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள நெல்பேட்டையில் தமிழக அரசால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் குப்பைக்கு வரி போட்டது தமிழக அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

குப்பைக்கு வரி என்பது உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்படி, மத்திய அரசு கொண்டு வந்தது ஆகும். அதை தமிழக அரசு கொண்டு வரவில்லை என்று கூறினார்.

இதன்மூலம் குப்பைக்கு வரிபோட்டது மத்திய அரசு தான் என தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூ மூலம் வெளியாகியுள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குப்பைக்கு கூட வரி போடுவது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என பலரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.